என்ன அவசரம்?
யாரோ கேட்கிறார்கள்
என்னுள் வெளியுள்
இரு உலகங்கள்.
எந்த உலகில் இருந்து
கேட்கிறது இந்தக்குரல்.
உள்ளென்பதெது
புறமென்பதெதுவென்று
தெரியாமற்பின்னி
புழுவாய் நெளியும்
மனசில்
எங்கிருந்து எவர் கேட்கிறார்?
அவசரமொன்றுமேயில்லை!
இயல்பாகவேதான்
தொலைந்து கொண்டிருக்கிறேன்
நான்!
நிஜத்துக்கும் நிழலுக்குமான
ஓய்வற்ற அலைச்சலில்
ஆர்ப்பாட்டமில்லாமல்
கரைந்துகொண்டிருக்கிறேன்
மாய உலகின்
இருளிலிருந்து நீளுகின்ற
கரங்கள் என் மூச்சினைத்திருடுகின்றன
மின்னி காட்சிகளாய்ப்பின்னி
ஒலித்து
நிஜம் மறைக்கின்ற
இன்னொரு உலகில்
என் இருப்பு
அமிழ்ந்து கொண்டிருக்கின்றது
விரல்கள் சொடுக்கும்பொழுதில்
காட்சிகள் மாற்றுகிற மனசோடு....
உட்கார்ந்து கொண்டுதானிருப்பேன்
சிரித்துக்கொள்ளவும் கூடும்
பேசிக்கொள்வதுமுண்டு
வெளிக்கு
வெள்ளையும் சொள்ளையும்தான்
ஆயினும்
உள்ளே உக்கிரமான
போர் நிகழ்வதறிவதில்லை
இவ்வுலகம்
ஆச்சரியமில்லை
யாருக்கும் புரியாமல் போகும்
உள்ளே
மூழ்கிக்கொண்டிருப்பவரின்
அவசரம்
புரியப்படாமலே
மூழ்கிப்போவது
துரதிர்ஷ்டந்தான்
ஆனாலும்...
ஆழச்சென்றபின்
இருப்பதில்லையே
இந்த உலகு
***********************************************
தொடர்பான பதிவுகள்:
1.எனக்கு யாருமில்லை நான் கூட
2.காதில் கேட்கும் குரல்
3.The beautiful mind-இன்னுமொரு பார்வை
4.நீயும் பொம்மை நானும் பொம்மை;ஆட்டுவிக்கும் மனம்.
***********************************************
தொடர்பான பதிவுகள்:
1.எனக்கு யாருமில்லை நான் கூட
2.காதில் கேட்கும் குரல்
3.The beautiful mind-இன்னுமொரு பார்வை
4.நீயும் பொம்மை நானும் பொம்மை;ஆட்டுவிக்கும் மனம்.