Sunday, November 27, 2011

நீங்கள் போராடிக்கொண்டிருந்தபோது ,நான் படித்துக்கொண்டிருந்தேன்.




நான் படிக்கத்தொடங்கியபோது
நீங்கள்
போராடத்தொடங்கியிருந்தீர்கள்
நான் வகுப்பறைகளில்
புத்தகங்களிலும்
இலக்கியத்திலும் 
மூழ்கியிருந்தபோது
நீங்கள்
காடுகளிலும் காவலரண்களிலும்
உறக்கம் தவிர்த்திருந்தீர்கள்


உங்கள் உடலங்கள்
ஊர் திரும்புகிறபோதுகளில்
கறுப்புக்கொடி கட்டி
தோரணங்களைத்தொங்கவிட்டு
அஞ்சலி செலுத்துவேன்
ஆயினும்
அடுத்த பரீட்சைக்காக
என் படிப்பு
தொடர்ந்து கொண்டேயிருக்கும்

இடம் பெயரும்போது
புத்தகங்களையும் காவியபடிதான்
ஓடியிருக்கிறேன்.
ஷெல்களுக்கும்
விமானம் வீசும் குண்டுகளுக்கும்
விழுந்து படுத்துவிட்டு
ஓய்ந்தபின்
எழுந்து படிக்க
என்னால் முடிந்திருக்கிறது.

காய்ந்து இறுகிய
கரங்களில்
துப்பாக்கிகளோடு
நீங்கள்,..
என்
மென்மையான
கைகளில் புத்தகங்களோடு
நான்..
எத்தனைமுறை
கடந்து சென்றிருப்போம்
ஏன்
என்னைக்குறுக்கிடவேயில்லை
நீங்கள்?

படிப்பில் நான்
வென்றுவிட்டதாக
சொல்லிக்கொள்கிறார்கள்.
இப்போது….

நீங்கள்
போராடிக்கொண்டிருந்தபோதுதான்
நான் படித்துக்கொண்டிருந்தேன்.

Saturday, November 19, 2011

ஒரு கவிதை அகழ்வு!



எனக்கு புதையல் தோண்டுவதுபிடிக்கும்.
மட்டான வரைபடத்தை வைத்துக்கொண்டு இடத்தைக்கண்டு பிடித்துவிட்டால் கடப்பாரையோ மண்வெட்டியோ மாங்கு மாங்கென்று தோண்டினால் ஒரு இடத்தில் மூன்றுசுழி ணாண இங்கண்ணவோடு மோதி ’ணங்’ என்ற சத்தம் வர நிறுத்தி மண்ணை வழித்து பெட்டியை திறக்கவேண்டியது..இதுதான் என் வழி ,தோண்டுதல்,தோண்டுதல்,தோண்டுதல்.
நட்பாஸ் தோண்டுவதில்லை. அவர் அகழ்கிறார்.அவருக்கு புதையல் தேடுவதில் ஒரு பக்குவம் இருக்கிறது.கைதேர்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்போல கவனத்துடன் நிலத்தை படைபடையாக வெட்டுகிறார். அதை விட திறந்த மனத்துடன் பாவனையின்றி இருக்கிறார்.கிடைக்கப்போவது பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறேன் என்ற பாவனையோ முன்முடிபுகளோ இல்லை.
அதனால் பக்குவமான அகழ்வு. மண்ணையும் கிடைத்தவற்றையும் அலசுகிறார்.கிடைக்க இருப்பது எதுவோ அதை முழுமையாக சேதமின்றி எடுப்பதில்தான் அவர் கவனம் இருக்கும்.
யாரோ ட்ரன்ஸ்டேமராம்.நோபல் பரிசு பெற்றவராம்.கவிதைகள் எழுதியிருக்காராம்.சுவீடீஷ்காரராம்.
நம்ம நட்பாஸ்தான் போய்ப்பார்த்துவிட்டு வந்து சொன்னார்.
”திண்ணையில்கிடக்கிறார்”
”உங்கவூட்டுதிண்ணையிலா” என்று வாரிச்சுருட்டிக்கேள்வி கேட்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மக்கு இல்லை.
இணையத்தில் எல்லாம் இருக்கு. சந்தைதான் பெரியது.அதுதவிர கூச்சல்கள் கும்மாளம்.
இணையத்தில் கோயில் இருக்கிறது. சிலரை சொற்களால் கோயில் கட்டி ஆறுகாலத்துக்கும் பூசை செய்கிறார்கள்.சிலரை துரத்தியடித்து சொற்கள் எறிந்து கொல்லவும் செய்கிறார்கள். ஆங்காங்கே பலிபீடங்களும் போட்டிக்களங்களும் கோஷங்களும் அப்பப்பா..
இப்படி சந்தடிமிக்க சூழலில் நம்ம நட்பாஸ் ஆரவாரவில்லாமல் ஒரு வித்தியாசமான ஒரு பணியைச்செய்துவருகிறார்.
அகழ்வும் ஆராய்வும் செய்து பொக்கிஷங்களை வெளிக்கொணர்கிறார்.இங்கு பார்வைக்குத்தருகிறார் நெடுநாளாகவே.
பாருங்களேன்.இந்த சுவிடீஷ்காரரின் கவிதையை.
Midwinter
A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there’s a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.
[Translated from the Swedish by Robert Bly]

சுவிடீஷ் மொழியில் எழுதப்பட்டு ஆங்கில மொழிக்கு வந்து பிறகு தமிழில் கிடைக்கப்பெற்றது இந்தக்கவிதை.இந்த இடத்தில் எனக்கு ஏனோ
The Three Burials of Melquiades Estrada என்ற சினிமா ஞாபகம் வந்தது. ஆயினும் அதைக்கடந்து சொல்லவந்ததைச்சொல்கிறேன்.
நட்பாஸின் ஒரு பக்குவமான அகழ்வுக்காரனின் மனநிலையுடனான கவிதையின் சிதைவுறாத மொழிபெயர்ப்பை நோக்கிய தேடல் வியக்கவைக்கிறது.சங்கேதக்குறிகள் போல எனக்குத்தோன்றும் அறியாத சுவிடீஷ் மொழியினை கூட தேடி எடுத்து பார்க்கிறார்.வாலைமட்டும் வெட்டி யெடுத்துவிட்டு டைனோசோர் என்று திருப்திப்பட்டுக்கொள்ள அவரால் இயலவில்லை.
கடந்த சில நாட்களாக அவர் உறைபனியின் , பரவியிருக்கிற நீலநிற பின்ணணியொன்றில் டம்போரின் என்கிற அவர் கேட்டறியாத ஒரு வாத்தியக்கருவியின் இசையைக்கேட்கமுயல்கிறார். கவிஞனின் குரலை அவனது மனத்தை படம்பிடிப்பதற்காக கானகத்தில் எங்கோமறைந்திருக்கிற எப்போதாயினும் ஒருமுறை தோன்றிப்பாடுகிற ஒரு பறவையினைப் பதிவுசெய்ய கானகமெங்கும் அலைகிற புகைப்படக்கலைஞனின் தவிப்பும் அர்ப்பணிப்பும் அவரில் தெரிகிறது.
இந்த இடத்தில் நான் ஒரு மில்லியனராக இல்லைஎன்ற கவலை எனக்கு வருகிறது.அப்படியிருந்திருந்தால்
”வாருங்கள் நட்பாஸ் சுவீடனுக்கு போவோம் உறைபனியில் அமர்ந்து ட்ம்போரின் கேட்போம்”
என்றழைத்திருந்திருப்பேன் சுவீடனுக்கான விமானச்சீட்டுக்களோடு.
இனி அவரின் தேடலைப்படியுங்கள்:
********************************************
நீலக் கிளரொளி
என் ஆடைகளின்று பெருக்கெடுத்தோடும்.
இடைபனிக் காலம்.
உறைபனி வெண் பறைகளின் சலங்கை.
என் கண்கள் மூடும்.
ஓசைகளற்ற ஓர் உலகம்
ஆங்கோர் திறப்பு
களப்பட்டோர் அவ்வழி
கவர்படும் புலம்.
(நட்பாஸின் மொழிபெயர்ப்பு)
அதற்கு முன் முடிந்த கதை/ கவிதை: தெரியாத மொழியில் வந்த கவிதையை இடைமொழியின் துணை கொண்டு மொழிபெயர்ப்பதில் உள்ள சில சிக்கல்களை/ வாய்ப்புகளைச் சுட்டும் விதமாக-
பயன்படுத்தப்பட்ட ஸ்வீடிஷ் அகராதி இது –
http://folkets-lexikon.csc.kth.se/folkets/folkets.en.html
இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் காணக் கிடைக்கின்றன:
http://www.guernicamag.com/poetry/47/midwinter/
http://www.blackbird.vcu.edu/v10n1/poetry/crane_p/017pc_page.shtml
இவற்றிடையே உள்ள பெரிய வித்தியாசம்- ஒரு கவிதையில் ஒற்றைப் பறை, இன்னொன்றில் பன்மை.
பயன்படுத்தப்பட்ட ஸ்வீடிஷ் சொல்: tamburiner.
பொருள்: tamburin noun, tambourine
ஒரு இடத்தில், “Forming the plural of Swedish nouns is not quite as simple as in English. You will see that the great majority of nouns have plurals ending in -r, however some get -or, some get -ar, and some get –er…. -er suffix: Many foreign words fall in this category, as well as those words with irregular plurals ” என்று படிக்கிறேன். எனவே பன்மையைத் தேர்வு செய்யத் தோன்றுகிறது.
glow என்றும் light என்றும் மொழிபெயர்க்கப்பட்ட, sken என்ற சொல், “light, glare [figuratively, " semblance, guise"]” என்று பல் வகையில் பொருட்படுகிறது. இதில், ” semblance, guise” என்ற பொருளைத் தமிழுக்குக் கொண்டு வர முடியாது. நீல வண்ணத்தில் ஒளிர்கிறது என் ஆடைகள் என்று சொல்லலாம், இந்தப் பொருளை உணர்த்த நீல வண்ணம் தரித்து ஒளிர்கிறது என் ஆடைகள் என்று சொல்லலாமோ என்னவோ- அதுகூட சரியாக வருவதாக இல்லை.
அடுத்த அடியில் உள்ள strömmar என்ற பதம் stream என்று பெயர்க்கப்படுகிறது. அகராதி, “stream, flow, pour [also used figuratively]” என்று சொல்கிறது. இந்த ஒளி வெள்ளமாய்ப் பெருகிப் பரவுகிறது: தண்ணீரைப் போல்.
யோசித்துப் பார்த்தால், ஒரு தனி மனிதனின் சோகத்தில், அவனது ஆடைகள் நீல வண்ணம் தரித்து, அந்த நீலம் அவற்றிலிருந்து வெள்ளமாய் பரவுகிறது என்ற தோற்றம் எழுகிறது.
குளிர் காலம். இருள். பனி உடைகிறது, உரசுகிறது- Klirrande- clink ஆகும் ஓசை பல திசைகளில் இருந்து கேட்கிறது. இருள், குளிர், சோகம், உடையும் பனிக்கட்டிகள்: பறையின் சலங்கை (http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Pandei_inter.jpg/250px-Pandei_inter.jpg இந்தப் புகைப்படத்தில் உள்ள மணிகளின் ஓசையை சலங்கை என்று சொல்லலாமா?) பறை ஒலிக்கவில்லை,. இரவின் நிசபததில் திசையெங்கும் அமானுடமாய் அதன் மணிகள் கிணிகிணிக்கின்றன.
கவிஞன் தன் கண்களை மூடிக் கொள்கிறான்- கண்கள் என்றால் கண்களை மட்டுமல்ல, புலன்கள் அனைத்தும் உன்முகப் பார்வை கொள்கின்றன. அவனை மௌனம் நிறைக்கிறது.
நிசப்தமான ஒரு உலகம் இருக்கக்கூடும் என்கிறான், தான் அக விழியால் காண்பதால், அந்த உலகுக்கு ஒரு திறப்பு இருக்கக் கூடும் என்று சொல்கிறான்: பனிக்கட்டிகள் உடைவது போல், இந்த பருவுலகம் உடையலாம். அதன் வழியாக இறந்தவர்கள் இவ்வுலகின் எல்லையைத் தாண்டி கடத்திச் செல்லப்படலாம்.
இங்கு dead என்று ஆங்கிலத்தில் பெயர்க்கப்படும் döda என்ற சொல்லின் பொருள் பலதரப்பட்டவை: kill [figuratively, " repress"], cancel, dispatch, eliminate, eliminate, kill off என்றும் இன்னும் பலவுமாக விரிகிறது: http://folkets-lexikon.csc.kth.se/folkets/folkets.en.html#lookup&d%C3%B6da
இவர்களை இறந்தவர்கள், என்று பொதுவாய்ச் சொல்லிவிட முடியாது- இவர்கள் கொல்லப்பட்டவர்கள்: வீழ்ந்தவர்கள், கூற்றுவனால் கவர்ந்து செல்லப்பட்டவர்கள்,
—-
எங்கே? கவிதையில் விடையில்லை. ஆனால் கவிஞனின் உலகை சோகம்/ நீலம் நிறைக்கிறது: (அவனது இதயத்தை உறைபனி என்று சொல்லலாமா?) உறைபனி உடைவதுபோல் ஒரு திறப்பு- அதன்வழி அந்த உலகின் எல்லையைக் கடந்து வீழ்ந்தவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள்- இந்த உலகை நீலம் நிறைக்க வாய்ப்பில்லை, இல்லையா?
—-
ட்ரான்ஸ்ட்ரெமரை mystic poet என்று சொல்கிறார்கள். அவர் மனநல மருத்துவரும்கூட. பொதுவாக mysticகளுக்கு புறவுலகும் அகவுலகும் வெவ்வேறாக இருப்பதில்லை, இல்லையா?
இந்தக் கவிதையில் அவர் தனி மனித மீட்சியைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். பறையொலி இசைப்பது வாழ்பவர்களுக்காக, இல்லையா? அது இறந்தவர்களை மட்டுமல்ல, நம்மையும் வாழ்வை நோக்கி அழைக்கிறது.
மேலும் படிக்க:1. பதிவு
                       2 .நடுப்பனிக்காலம்
                       3.http://djthamilan.blogspot.com/2011/11/blog-post_16.html
********************
சில சேர்க்கைகளுடன் மீள்பதிவு.முதல் பதிவிட்டது:கள்ளிப்பெட்டி
நன்றி :நட்பாஸ்